அரசின் நலத்திட்டங்களை பெற்று
இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அமைச்சர் சுந்தர்ராஜ் பேச்சு
இராமநாதபுரம், ஆக. 29:–
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக மேலக்கொடுமனூர் ஊராட்சியில் 48 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 97 ஆயிரத்து 600 மதிப்பிலும், பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் நெல்மடூர் ஊராட்சியில் 33 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 850 மதிப்பிலும், பி.புதூர் ஊராட்சியில் 24 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்தி 800 மதிப்பிலும் ஆக மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 7 ஆயிரத்து 250 மதிப்பிலான விலையில்லா ஆடுகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:–
தமிழக முதலமைச்சர் மக்களின் தேவைகளையும், எண்ணங்களையும் அறிந்து செயல்பட்டு வருகிறார். அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைவதன் மூலம் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது.
கிராமப்புறத்தில் உள்ள ஏழை–எளிய மக்கள் குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக முதலமைச்சர் 30 ஆயிரம் மதிப்புள்ள கறவை மாடுகளும், 12 ஆயிரம் மதிப்புள்ள 4 வெள்ளாடுகளும் வழங்க உத்தர விட்டதன் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,800 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 14 லட்சம் மதிப்பில் விலையில்லா கறவை மாடுகளும், 7,650 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 33 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் விலை யில்லா வெள்ளாடுகளும், 35 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 25 மதிப்பில் நாட்டுக்கோழி பண்ணைத் திட்டமும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் வேலை பழுவை குறைக்கும் வகையில் தரமான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறியும், மாணவ–மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தவதற்காக இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் மடிக்கணினி வழங்கும் திட்டமும், பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக 10–ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் திருமண உதவித்தொகையுடன் தலா 4 கிராம் தாலிக்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் திருமண உதவித்தொகையுடன் தலா 4 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக முதலமைச்சர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை பகுதியில் கலைக்கல்லூரிகளை வழங்கி உள்ளார். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அரசின் அனைத்து திட்டங்களையும் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய தலைவர் முனியசாமி, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் காவேரிசெல்வன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, ஒன்றியக்குழு தலைவர் சுதந்திராகாந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிர மணியன், சாந்தி, குருவம்மாள், கணேசன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
0 comments