ரஷ்ய அதிபர் புதினை கேலி செய்து படம் வரைந்த
ஓவியர் நாட்டை விட்டு ஓட்டம்
மாஸ்கோ, ஆக. 29:-
ரஷ்யாவில் ஓரினச்சேர்க்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இச்சட்டத்தை ரஷ்ய ஆர்த்தோடக்ஸ் சர்ச் தலைவரும் ஆதரித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பிரதமர் மெத்வதேவ் இருவரையும் கேலிச் செய்து சித்திரம் வரைந்து அதை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கண்காட்சியகத்தில் ரஷ்ய ஓவியர் கான்ஸ்டாண்டின் அல்டுனின் கடந்த செவ்வாய் அன்று வைத்திருந்தார்.
இதில் பெண்களின் உள்ளாடை மட்டும் அணிந்திருக்கும் பிரதமர் மெத்வதேவின் தலைமுடியை, பெண்ணின் உள்ளாடை அணிந்திருக்கும் அதிபர் புதின் கோதி விடுவது போன்று வரைந்து இருந்தார். மேலும் ஓரினச்சேர்க்கை பிரச்சார தடை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மற்ற மூவரின் படங்களையும் கேலி செய்து செய்து ஓவியம் வரைந்து இருந்தார் அல்டுனின். இக்காட்சிகள் ரஷ்யாவில் பரப்பாக பேசப்பட்டது.
இதனையடுத்து காலரியில் இருந்த அதிபர், பிரதமர் மற்றும் மூவரின் கேலிச்சித்திரங்களை கைப்பற்றிய போலீசார், கண்காட்சியையும் இழுத்து மூடிவிட்டனர். இந்நிலையில் ஓவியர் அல்டுனின், டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன் நகருக்கு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து கேலிச்சித்திரம் வைக்கப்பட்ட காட்சியகத்தின் முதலாளி கூறியதாவது:-
ஓவியர் கான்ஸ்டாண்டின் அல்டுனினுக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு கொண்டு வரப்படுகிறது என்ற செய்தியை கேட்டவுடன், இங்கிருந்து அவர் வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடிவிட்டார். பின்னர் அங்கிருந்த அழைத்த அவர், நான் சிறையில் இருக்க விரும்பவில்லை. நிறைய ஓவியம் வரைய விரும்புகிறேன் என்று சொன்னார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்யாவில் மத மற்றும் இன வெறுப்புக்கு எதிராக எழுதுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் தீவிரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments