தூத்துக்குடியில் நடுரோட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்த வாலிபர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி நிகிழேசன் நகரைச் சேர்ந்வேர் ராஜசேகர். இவரது மகள் தீபா (வயது 27). கரூர் வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தர்.
சில வருடங்களுக்கு முன்பு பாலசுந்தர் தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்த போது தவறுதலாக அது தீபாவின் செல்போனுக்கு சென்று விட்டது. இதன் மூலம் பாலசுந்தருக்கும், தீபா வுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது பாலசுந்தர் தான் என்ஜினீயராக வேலை பார்ப்பதாக கூறி உள்ளார். நாளடைவில் இவர்கள் பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. தற்போது இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
திருமணத்திற்கு பிறகு தான் பாலசுந்தர் என்ஜினீயர் இல்லை என்பதும் அவர் பொய் சொல்லி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும் தீபாவுக்கு தெரிய வந்தது.
இதை பற்றி அவர், பால சுந்தரிடம் கேட்டு தகராறு செய்தார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு தீபா வந்து விட்டார். மேலும் கணவரிடம் விவாகரத்து கேட்டு அவர் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் தீபாவை கணவருடன் சேர்ந்து வாழும் படி பாலசுந்தரின் தந்தை கலியபெருமாள், தாய் ஜெய ராணி, கோவையைச் சேர்ந்த நண்பர் ஆனந்த் ஆகியோர் வற்புறுத்தி வந்தனர்.
ஆனால் அதற்கு தீபா சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் பாலசுந்தரும் அவரது நண்பர் ஆனந்த்தும் நேற்று தூத்துக்குடி சென்றனர். அவர்கள் தீபாவை பேச வேண்டும் என்று கூறி கடை வீதிக்கு அழைத்து உள்ளனர்.
அங்கு சென்ற தீபாவிடம் அவர்கள், சமரசப்பேச்சு நடத்தினார்கள். தன்னுடன் சேர்ந்து வாழும்படி பாலசுந்தர் தீபாவை அழைத்தார். அதற்கு அவர் மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது பாலசுந்தருக்கு ஆதரவாக பேசிய ஆனந்த் திடீரென்று தான் வைத்திருந்த பிளேடால் தீபாவின் கழுத்தை அறுத்தார். இதனால் அலறியபடி தீபா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
உடனே பாலசுந்தரும், ஆனந்த்தும் அங்கிருந்து தப்பியோடி ஓடி விட்டனர். நடுரோட்டில் கழுத்து வெட்டுப்பட்டு கிடந்த தீபாவை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த், பாலசுந்தர், கலிய பெருமாள், ஜெயராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments