இந்து தலைவர்களை கொல்ல நெல்லையில் லட்சக்கணக்கில் பண உதவி
ரூ.6 லட்சம் பறிமுதல்
மதுரை, ஆக. 13:
தமிழகத்தில் இந்து தலைவர்களை கொல்ல லட்சக்கணக்கில் பண உதவி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெல்லையில் போலீசார் ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கடந்த ஜூலை 1–ந்தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், ஜூலை 19–ந்தேதி பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ், மதுரையில் இந்து முன்னணி ஆதரவாளர் பால் கடைக்காரர் சுரேஷ் ஆகியோர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் இந்து தலைவர்களை குறிவைத்து நடந்த இந்த கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
விசாரணையில் மதுரையில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை பைப் வெடி குண்டு வைத்து கொலை செய்ய முயன்ற போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், பறவை பாதுஷா ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இவர்களை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் 18 கிலோ வெடி மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தமிழகத்தில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை கொலை செய்யவும், அதற்கான வழக்கு செலவுக்காகவும் ரூ.6 லட்சம் வரை பணம் வசூல் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த பணத்தை மேலப்பாளையத்தை சேர்ந்த கட்டை சாகுல் வீட்டில் பதுக்கி வைத்து இருந்தனர். இதையறிந்த சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் கட்டை சாகுல் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ரூ.6 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.
போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட கட்டை சாகுலையும், முகம்மது தாசிமையும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6 லட்சம் பணமும் ஒப்படைக்கப்பட்டது.
இதன் பின்னணியில் போலீஸ் பக்ருதீன், கிச்சான் புகாரி ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் தமிழகத்தில் இந்து நிர்வாகிகளை கொலை செய்ய பல லட்சம் வரை பணப்பட்டுவாடாவை சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதனிடையே மதுரை பால்கடைக்காரர் சுரேஷ் கொலை தொடர்பாக கைதான அப்துல்லா, தவுபீக் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. மகேஷ்குமார் விசாரணை நடத்தினார்.
முக்கிய குற்றவாளியான போலீஸ் பக்ருதீன் மதுரை புதூரில் உள்ள அப்துல்லாவை பார்க்க அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு உதவியாக அப்துல்லாவின் நண்பர்கள், உறவினர்கள் இருக்கலாம் என கருதி சம்பந்தப்பட்டவர்களிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி. நாகஜோதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
0 comments