குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்கிறார்
மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன்
நடிகர் ஆனந்த் பாபுவின் மனைவி பரபரப்பு புகார்
சென்னை:
நடிகர் ஆனந்த் பாபுவிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி, சென்னை, குடும்பநல கோர்ட்டில், மனுத் தாக்கல் செய்துள்ளார். விசாரணை, ஆகஸ்ட் 20 க்கு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆனந்த் பாபு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனாவார். ஆனந்த் பாபுவுக்கும், சாந்தி என்பவருக்கும், 1985ல், கிறிஸ்தவ முறைப்படி, திருமணம் நடந்தது. இவர்களுக்கு, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி சாந்தி மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், கூறியுள்ளதாவது: திருமணமான பின், மூன்று மாதம் மட்டுமே சந்தோஷமாக இருந்தேன். என்னிடம் அவர் சுமூகமாக இல்லை. அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். படப்பிடிப்புகளுக்கு செல்வதாக நினைத்திருந்தேன்.
என் மாமனார், எங்களை அன்புடன் பராமரித்து வந்தார். அவருக்கு சுமையாக இருக்க விரும்பாமல் என் குழந்தைகளுடன் தனியாக வசித்தேன். அப்போதும், அவர் எங்களை கவனிக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக, வேலை தேடினேன். ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களை செய்தேன். என் சுய சம்பாத்தியத்தில், ஈக்காட்டுத்தாங்கலில் வீடு வாங்கினேன்.
ஆனந்தபாபு கடந்த 8 ஆண்டுகளாக, வீட்டிற்கு வரவில்லை. அவரது தந்தையின் சொத்துகளை விற்றுவிட்டார்; எங்களுக்கு ஒரு பைசா கூட தரவில்லை. மீண்டும் எங்களைத் தேடி வந்தார். குழந்தைகளுக்காக அவரை ஏற்றுக்கொண்டேன். ஆனால், அவர் திருந்தவில்லை. குடித்துவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டுவார். என்னையும், குழந்தைகளையும், சித்ரவதை செய்கிறார். எனவே, அவரிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும்'' இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல கோர்ட் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆனந்த் பாபு ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஆனந்தபாபு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலச்சந்தரின் வானமே எல்லை, கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
உடல்நலக்குறைவினால் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சமீபத்தில் வெளியான, ஆதவன் படத்தில், நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments