17 June 2013

D. ராஜாவுக்கு, அ.இ.அ.தி.மு.க. ஆதரவு : வேட்பு மனுவை வாபஸ் பெறுகிறார் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் கு. தங்கமுத்து

மாநிலங்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 

D. ராஜாவுக்கு, அ.இ.அ.தி.மு.க. ஆதரவு 

 வேட்பு மனுவை வாபஸ் பெறுகிறார் 

அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் கு. தங்கமுத்து

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு 



முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. தா. பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தங்கள் கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திரு. D. ராஜாவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் திரு. D. ராஜா, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. R. நல்லக்கண்ணு, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திரு. தா. பாண்டியன், மாநில உதவிச் செயலாளர் திரு. சி. மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. M. ஆறுமுகம், திரு. S. குணசேகரன், திரு. K. லிங்கமுத்து, திரு. N. நஞ்சப்பன், திரு. பி.எல். சுந்தரம், திரு. K. உலகநாதன் மற்றும் திரு. வி. பொண்ணுப்பாண்டி ஆகியோர் நேரில் சந்தித்து, வரும் 27-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர் திரு. D. ராஜாவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது, கழகப் பொருளாளரும் நிதித்துறை அமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர். 

அ.இ.அ.தி.மு.க. ஆதரவு

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரு. D. ராஜாவுக்கு, அ.இ.அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வருகின்ற 27-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5 வேட்பாளர்கள் ஏற்கெனவே கழக ஆட்சி மன்றக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரு. D. ராஜாவுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தேசியத் தலைவர் திரு. A.B. பரதன், தேசிய பொதுச் செயலாளர் திரு. சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு மாநிலக் குழுச் செயலாளர் திரு. தா. பாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. ஆர். நல்லக்கண்ணு ஆகியோர் தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

இதன்பேரில், இக்கோரிக்கையை கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரு. D. ராஜாவுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கலாம் என்றும், கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 5 வேட்பாளர்களில் ஒருவரது வேட்பு மனுவை திரும்பப் பெறலாம் என்றும் கழக ஆட்சி மன்றக் குழு முடிவு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

எனவே, கழக ஆட்சி மன்றக் குழு எடுத்துள்ள முடிவின்படி, நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஏற்கெனவே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள திரு. கு. தங்கமுத்து, தனது வேட்பு மனுவை திரும்பப் பெறுவார் என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரு. D. ராஜாவுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கும் என்றும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top