இராமநாதபுரம் பஸ் நிலையத்தில் சுகாதாரமற்ற கழிப்பிடம்:
சீரமைப்பு பணி மேற்கொள்ள எம்எல்ஏ கோரிக்கை
இராமநாதபுரம், ஜூன் 5:
இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் குறைபாடுகளை சீர்படுத்த வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, மாவட்ட கலெக்டர் நந்தகுமாரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மாநிலத்தின் பல பகுதி மக்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநில மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இந்நிலையில் இப்பேருந்து நிலைய இலவச கழிப்பறை சுகாதாரமற்றதாகவும், கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் உள்ளது. இங்குள்ள தனியார் உணவகங்கள் கழிவுநீரை திறந்த நிலையில் விடுவதால் சுகாதாரமற்று உள்ளது. இவற்றை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் தனியார் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பயணிகளுக்கும் பேருந்துகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும் இவற்றை நிறுத்த அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments