துப்பாக்கி சூடு : இராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவில் மோதல்
பனைக்குளம், ஜூன். 1:
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் கடற்கரை பகுதியில் தர்மமுனீசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழாவின் போது, பாய்மர படகு போட்டியும் நடத்தப்படுவது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடை பெற்று வரும் நிலையில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மேலும் பால்குடம் எடுத்து சென்ற பக்தர்கள் ஊர்வலம் குறிப்பிட்ட பகுதி வழியாக சென்றபோது மேளதாளம் முழங்கி, வாண வேடிக்கைகளும் நடத்தப்பட்டன. அந்த பகுதியில் மேளம் அடிக்கவோ, வாண வேடிக்கை நிகழ்த்தவோ தடை உள்ள நிலையில் அது மீறப்பட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் திடீரென தாக்குதலில் இறங்கினர். கல்வீச்சு சம்பவமும் நடைபெற ஒரு தரப்பை சேர்ந்த 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இது குறித்த தகவல் கிடைத்ததும் தேவிபட்டிணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். மேலும் கூட்டத்தினரை கலைக்க தடியடியும் நடத்தினர். ஆனால் அதற்கு பலன் கிடைக்காததால் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 3 ரவுண்டு சுட்டார்.
இதன்பிறகே கூட்டம் கலைந்து ஓடியது. இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் டி.ஐ.ஜி. பாஸ்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன், துணை சூப்பிரண்டுகள் முரளீதரன் (ராமநாதபுரம்), மோகன்தாஸ் (ராமேசுவரம்), தேவிபட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றத்தை தணிக்க அதிரடிப்படை போலீசாரும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோவில், பள்ளிவாசல், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. மோதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருதரப்பையும் சேர்ந்த 11 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
0 comments