கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 வயது சிறுவன் சாவு
இராமநாதபுரம், ஜூன் 1:
இராமநாதபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கட்டிட தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா. இவர்களின் மகன் சூர்யா (வயது 2). ராஜ்குமார் தனது தந்தை செல்வம், தாய் செல்வி ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
நேற்று காலை செல்வமும், ராஜ்குமாரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் கார்த்திகாவும், செல்வியும் குழந்தையை கவனித்து வந்தனர். வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் சூர்யாவை திடீரென்று காணவில்லை. அங்குமிங்கும் தேடினர். அப்போது வீட்டின் முன்புறம் உள்ள திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் தொட்டியை மூடி வைத்திருந்த அட்டையை காணாததை கண்டு சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து தொட்டியை சுத்தம் செய்ய வந்த பணியாளரிடம் தொட்டிக்குள் தேடி பார்க்கும்படி கூறினர். அவர் கழிவுநீர் தொட்டிக்குள் பார்த்தபோது சிறுவன் சூர்யா இறந்த நிலையில் மிதந்து கிடந்தான். பின்னர் சிறுவனை வெளியே தூக்கினர். சூர்யாவை கண்ட அவனது தாய், தந்தை உள்ளிட்டோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
0 comments