பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக்குழுத் தலைவர் பதவியால்
பெருமை: மோதி
அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களையும் தாண்டி பாரதிய ஜனதாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரசாரக் குழு தலைவர் பதவி, அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
பிரச்சாரக் குழு தலைவர் மோதி
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்து முடிந்திருக்கிறது. நரேந்திர மோதியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டத்தில் எழுப்பினார் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர். கூட்டத்தில், இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் எழுந்தன. பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இக்கூட்டத்தில் பங்கேற்காததால் நரேந்திர மோதிக்கு முக்கிய பொறுப்பு கொடுப்பதை அவர் விரும்பவில்லை என்று செய்தி வெளியானது.
ஆனாலும், தொலைபேசியில் அத்வானி தமது ஒப்புதலை அளித்துவிட்டதாக பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கூறியதும், நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோதியை செயற்குழு ஒருமனதாக தேர்வு செய்தது.
பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி
இந்த அறிவிப்பு வெளியானதும், கோவா, மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாரதிய ஜனதா தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மூத்த தலைவர் அத்வானி, தமக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறியதாக நரேந்திர மோதி தெரிவித்தார். அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி, சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்ட பாரதிய ஜனதா முக்கிய தலைவர்கள், இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் கருத்து
நரேந்திர மோதியை பிரதமர் வேட்பாளராக்க முட்டுக்கட்டை போட்டு வரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதாவின் உட்கட்சி விவகாரம் இது என்று கூறியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன்தான் பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், இடதுசாரிகள் கருத்து
நாடாளுமன்ற தேர்தலின் போது கோத்ரா ரயில் எரிப்பு - கலவரம் உள்ளிட்ட மோதியின் கடந்த கால நடவடிக்கைகள் மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவை ஒரு போட்டியாகக் கருதவில்லை, ஆகவே இந்த அறிவிப்பு தேர்தல் முடிவில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
பாஜகவுக்கு மோதி ஏற்றம் தருவாரா?
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் என்ற பதவியை எட்டிப் பிடித்திருக்கும் நரேந்திர மோதி, பிரதமர் வேட்பாளராவதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்திக் கொண்டுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளை சமாளித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோதி அறிவிக்கப்படுவாரா? வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அவர் வெற்றி தேடித் தருவாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
தொண்டர்கள் மத்தியில் மோதி உரை
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்றுவதில், பாரதிய ஜனதா கட்சி உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
கோவா தலைநகர் பனாஜியில், இன்று நிறைவடைந்த பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோதி, மத்திய அரசு மீதான நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழந்து விட்டதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி தற்போது அதிகாரப் பசியில் இருப்பதாகக் கூறிய மோதி, சி.பி.ஐ. அமைப்பைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை காங்கிரஸ் மிரட்டுவதாக புகார் கூறினார்.
மாவோயிஸ்ட் பிரச்னையை மத்திய அரசு தவறாக கையாண்டு வருவதாகவும், பல விவகாரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கேள்விகளுக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை என்றும் மோதி தெரிவித்தார். பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டது பெருமையளிப்பதாக தெரிவித்த மோதி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவேன் என்றும் கூறினார்.
0 comments