சாம்பியன்ஸ் டிராபி
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து போட்டி
மழையால் கைவிடப்பட்டது
பர்மிங்காம்:
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் டிராபி ஏ பிரிவு லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.பர்மிங்காம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக வாட்சன், வேட் களமிறங்கினர். அதிரடி வீரர் வாட்சன் 5 ரன் மட்டுமே எடுத்து மெக்லநாகன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஆஸி. அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த பிலிப் ஹியூஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பரிதாபமாக ரன் அவுட் ஆனார். ஆஸி. அணி 10 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.
இந்த நிலையில், வேட் கேப்டன் பெய்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 64 ரன் சேர்த்தது. வேட் 29 ரன் எடுத்து நாதன் மெக்கல்லம் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து பெய்லி -வோஜஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு போராடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர்.பெய்லி 55 ரன் எடுத்து (91 பந்து, 5 பவுண்டரி) நாதன் மெக்கல்லம் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வோஜஸ் 71 ரன் எடுத்து (76 பந்து, 7 பவுண்டரி) மெக்லநாகன் பந்துவீச்சில் பிரெண்டன் மெக்கல்லம் வசம் பிடிபட்டார்.
ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்தது.
244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்திருந்தபோது கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. ரோஞ்சி 14, கப்தில் 8 ரன் எடுத்து மெக்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். வில்லியம்சன் 18, ராஸ் டெய்லர் 9 ரன்னுடன் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.
0 comments