ராஜ்யசபா தேர்தல் நேரத்தில் எஸ்கேப் ஆன
தே.மு.தி.க வின் தேர்தல் பிரிவு செயலர்
முதல்வருடன் எம். எல். ஏ சந்திப்பு பின்னணி
ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தே.மு.தி.க., கட்சியின் தேர்தல் பிரிவு செயலரும், விருதுநகர் எம்.எல்.ஏ.,வுமான பாண்டியராஜன், முதல்வரை சந்தித்தது, அக்கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அடுத்த, விளாம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன். பி.இ.,- எம்.பி.ஏ., பட்டங்களை பெற்றவர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு, மனிதவளம் வழங்கும் நிறுவனம் உள்ளிட்ட, பல தொழில்களை நடத்தி வருகிறார். கடந்த, 1992ம் ஆண்டு, 60,000 ரூபாய் முதலீட்டில், "மாபாய்' நிறுவனத்தை துவக்கினார். இந்நிறுவனம், இன்று, 400 கோடி ரூபாய் மதிப்பிற்கு உயர்ந்து நிற்கிறது.
அரசியல்:
முதலில் பா.ஜ.,வில் இருந்தார். சில ஆண்டுக்கு முன், விஜயகாந்த் முன்னிலையில், தே.மு.தி.க.,வில் இணைந்தார். தே.மு.தி.க., வளர்ச்சிக்காக, பல்வேறு நிகழ்ச்சிகளையும், நலத்திட்ட உதவிகளையும், தனது சொந்த செலவில் வழங்கினார்.தே.மு.தி.க., சார்பில், இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமிற்கு, சென்னையில் ஏற்பாடு செய்தார். மாற்றுத் திறனாளிகளை, அதிக அளவில், கட்சியில் சேர்த்ததுடன், அக்கட்சியில் அவர்களுக்கென, தனி
அணி அமைக்கவும் ஆலோசனை வழங்கினார்.
தேர்தல்:
இதனால், விஜயகாந்தை எந்த நேரத்திலும் சந்திக்கும் அளவுக்கு, கட்சியில் பலம் வாய்ந்த நபராக மாறினார். 2009ம் ஆண்டு, லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு, ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 229 ஓட்டுகள் பெற்றார். இவர் ஓட்டுகளை பிரித்ததால், 15,764 ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்., வேட்பாளர் மாணிக் தாகூரிடம், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தோல்வி அடைந்தார். பாண்டியராஜனுக்கு, 2011 சட்டசபை தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட, விஜயகாந்த்,"சீட்' வழங்கினார். இத்தேர்தலில் பாண்டியராஜன் வெற்றி பெற்றார். கட்சிக்கு மட்டுமின்றி, கட்சியின் "டிவி' சேனலின் வளர்ச்சிக்காகவும், அதிக பணம் செலவழித்துள்ளார்.
அதிருப்தி:
பத்திரிகையாளர்களிடம் நெருங்கி பழகி, கட்சியின் ரகசியங்களை, இவர் வெளியில் சொல்வதாக, தே.மு.தி.க., மாநில நிர்வாகிகளுக்கு, சந்தேகம் எழுந்தது. இது குறித்து, விஜயகாந்திடம், பலமுறை புகார் கூறினர். அனுமதி பெறாமல், தனியார் "டிவி' சேனலில், பேட்டி
அளித்ததற்காக, அவரை விஜயகாந்த் அழைத்து, கடுமையாக கண்டித்து அனுப்பியுள்ளார். ஒரு முறை, கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு, தாமதமாக வந்ததால், அறைக்கு வெளியே, ஒரு மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்துள்ளனர். இது போன்ற நடவடிக்கைளால், கட்சி தலைமை மீது, அதிருப்தியில் இருந்து வந்தார்.
பழைய நண்பர் உதவி:
நேற்று, முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக மாறியுள்ளார். ராஜ்யசபா தேர்தல் நேரத்தில்,தே.மு.தி.க., தேர்தல் பிரிவு செயலர் பாண்டியராஜன், முதல்வரை சந்தித்திருப்பது, அக்கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பிற்கு, தற்போது அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா வேட்பாளர்களில் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இருவரும் முன்பு ஒரே கட்சியில், இணைந்து செயலாற்றிய, நட்பின் அடிப்படையில், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.அடுத்த ஆண்டு, நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட, பாண்டிய ராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே தொகுதியில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments