உளுந்தூர்பேட்டையில் நடந்தது
காதலனுடன் சீனப் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் சீனப்பெண்ணுக்கு இந்து முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு மதுரை தொப்பையாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் விவசாயி. இவருடைய மகன் வெங்கடேசன் (29). கடந்த 8 வருடங்களுக்கு முன் சீனாவிற்கு கேட்டரிங் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு உடன் வேலை செய்த மின்ஹாங், குவாயின் ஆகியோரின் மகள் சியாஉவா (28) என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. இந்த காதல் திருமணம் வரை சென்றுள்ளது.
இது குறித்து சியாஉவா தனது பெற்றோர்களிடம் தெரிவித்து அவர்களின் சம்மதத்துடன் வெங்கடேசனை சீனாவில் பதிவு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்வதற்கு இருவரும் ஆசைப்பட அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வெங்கடேசன் தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சீனாவில் இருந்து சொந்த ஊறான தொப்பையாங்குளம் கிராமத்திற்கு வந்த இருவருக்கும் நேற்று காலை உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
மணப்பெண் சியாஉவா கூரைப்புடவையில் மணமேடையில் அமர்ந்தார். அவருக்கு வெங்கடேசன் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மெட்டி அணிவித்து பின்னர் மேளதாளம் முழங்க தாலி கட்டினார். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து சியாஉவாவிடம் கேட்டபோது, “இந்த திருமணம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய கலாசாரம் பிடித்துதான் வெங்கடேசனை திருமணம் செய்து கொண்டேன்'' என்றார்.
0 comments