விஜயகாந்த் ஆவேசம் :
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தேமுதிக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக அரசு வக்கீல் அன்பழகன் கடந்த ஜனவரி மாதம் தி.மலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மார்ச் 6ம் தேதி விஜயகாந்த் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆஜராகவில்லை. இதையடுத்து ஏப்ரல் 5ம் தேதி ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். அன்றும் ஆஜராகாததால் ஜூன் 6ம் தேதி (இன்று) கண்டிப்பாக ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை தி.மலை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நாகநாதன் முன்பு விஜயகாந்த் ஆஜரானார். கோர்ட்டில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபையில் இருந்து 6 தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்து உள்ளது. இதை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும். கடந்த திமுக ஆட்சியில் அதிமுகவினர் எவ்வளவோ பேசினர். ஆனால் கருணாநிதி பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.
தேமுதிகவில் இருந்து எத்தனை எம்எல்ஏக்கள் போனாலும் பயப்பட மாட்டேன். பான்மசாலா, குட்கா தீமை என தடை விதிக்கிறார்கள். டாஸ்மாக் மது மட்டும் தீமை இல்லையா? மத்திய அரசு கூட்டிய கூட்டத்தில் பேச தன்னை அனுமதிக்கவில்லை என்கிறார் ஜெயலலிதா. அவர் மட்டும் சட்டசபையில் எதிர்கட்சிகளை பேச அனுமதிக்கிறாரா? இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
0 comments