பேரழிவு காரணமாக கேதார்நாத்,பத்ரிநாத் கோயில்களுக்கு
3 ஆண்டுகள் செல்ல முடியாது
உயிர் பிழைத்த யாத்திரிகர்கள் வேதனை
டேராடூன் :
கேதார்நாத்,பத்ரிநாத் கோயில்களுக்கு யாத்திரிகர்கள் 3 ஆண்டுகளுக்கு புனித பயணம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களை தலைமை நிர்வாக அதிகாரி பி.டி.சிங் நேற்று பார்வையிட்டார்.
அவர் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் பார்த்தது வேதனையாகவும், நம்ப முடியாததாகவும் உள்ளது. கோயிலை சுற்றி சேறுதான் மிஞ்சியுள்ளது. இங்கு சர்தாம் யாத்திரை மீண்டும் தொடங்க குறைந்தது 3 ஆண்டுகளாகும்’’ என்றார்.
கேதார்நாத்தில் உயிர் பிழைத்த மகாராஷ்டிராவை சேர்ந்த யாத்திரிகர் சீதாராம் கூறுகையில், ‘‘வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட இரவு அன்று 8 ஆயிரம் யாத்திரிகர்களும், அவர்களை ஏற்றி செல்வதற்காக கோவேறு கழுதைகளுடன் 4 ஆயிரம் பேர் இருந்தனர். சில மணி நேரத்தில் அத்தனை பேரும் பேரழிவில் சிக்கி மாண்டனர். விடுதிகள், கடைகள், வீடுகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தற்போது கோயிலும், தண்ணீரையும் தவிர அங்கு வேறொன்றும் இல்லை. இதுபோன்ற கொடுமையான காட்சியை நான் பார்த்ததே இல்லை’’ என்றார்.
0 comments