பரமக்குடியில் சரக்கு ரெயிலில் ‘திடீர்’ தீ விபத்து
பரமக்குடி, டிச. 6:
பரமக்குடிக்கு வந்த சரக்கு ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
வட மாநிலத்திலருந்து அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டு நேற்று இராமேசுவரத்துக்கு ஒரு சரக்கு ரெயில் வந்தது. அரிசி மூடைகளை இறக்கிவிட்டு மாலையில் மதுரை நோக்கி சரக்கு ரெயில் புறப்பட்டது.
பரமக்குடி ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் வந்த போது 11–வது பெட்டியின் சக்கரத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீ பிடித்தது. இது குறித்து அங்கிருந்த பயணிகள் ரெயில் நிலைய அதிகாரி அய்யப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின்படி சரக்கு ரெயில் உடனே நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயில் 15 நிமிடம் தாமதமாக பரமக்குடி ரெயில் நிலையத்துக்கு வந்து புறப்பட்டது.
தீவிபத்து ஏற்பட்ட சரக்கு ரெயில் பரமக்குடி ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
சரக்கு ரெயில் செல்வதற்காக பரமக்குடி ரெயில் நிலையம் அருகே உள்ள பொன்னையாபுரம் ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. ஆனால் தீ விபத்து காரணமாக சுமார் 45 நிமிடங்கள் வரை ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
0 comments