6 December 2013

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணம்

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணம்


 

நிறவெறி ஆட்சியை எதிர்த்து 27 ஆண்டுகள் சிறையில் போராடியவர்!
 பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசை பெற்ற மண்டேலா காலமானார்...

 ஜோகன்ஸ்பர்க், டிச.6:

             தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் கருப்பர் இன தலைவருமான நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்று நோயால் காரணமாக ஜோகன்ஸ்பர்க் ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் சிகிச்சை பலனளிக்காததால் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. அவரது மரண செய்தியை தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப்ஷுமா நேற்று இரவு அரசு டி.வி.யில் முறைப்படி அறிவித்தார். அப்போது, ‘‘நமதுநாடு தலைமகனை இழந்து விட்டது. அவரது ஆத்மா அமைதி பெறட்டும்’’ என மிக வருத்தத்துடன் கூறினார். அதைக்கேட்டதும் தென் ஆப்பிரிக்கா மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜோகன்ஸ்பர்க் நகரில் நெல்சன் மண்டேலா வீட்டின் வெளியே மக்கள் குவிந்தனர். கண்ணீர் விட்டு கதறி அழுத அவர்கள் கையில் தென்ஆப்பிரிக்க தேசிய கொடியை ஏந்தி இருந்தனர். கருப்பு சட்டைகளை அணிந்து இருந்தனர். அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். பாடல்களை பாடி சோகமாக காணப்பட்டனர். மண்டேலா கடந்த 1918–ம் ஆண்டு ஈஸ்டர்ன்கேப் நகரில் பிறந்தார்.

1943–ம் ஆண்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்தார். தென்ஆப்பிரிக்காவில் மைனாரிட்டியாக வாழும் வெள்ளையர்கள் மெஜாரிட்டியாக இருக்கும் கருப்பர் இனத்தவரை அடிமைகளாக நடத்தினர். இதை மண்டேலா கடுமையாக எதிர்த்தார். கருப்பர்களுக்கும், சம உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தினார். இதனால் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

1952 முதல் 1956 வரை 4 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் வழக்கு விசாரணையின் முடிவில் அவரது மீதான தேசதுரோக குற்றச்சாட்டு நிரூபிக்கபடாததால் விடுதலையானார். அதன் பிறகும் கருப்பர் இன மக்களுக்காக போராட்டம் நடத்தினார். 17 மாதம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 1962–ம் ஆண்டில் மீண்டும் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தனது வாழ்நாளில் 27 ஆண்டுகளை ஜெயிலில் கழித்தார். உலக நாடுகள் எதிர்ப்பால் 1990–ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அதுவரை வெள்ளையர்கள் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டம் நீக்கப்பட்டு கருப்பர் இனத்தவருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டது. 1994–ல் நடந்த அதிபர் தேர்தலில் மண்டேலா போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் கருப்பர் இனத்தின் முதல் அதிபர் என்ற பெருமையை பெற்றார்.


முதுமை காரணமாக 1999–ம் ஆண்டில் பதவி விலகினார். 2001–ம் ஆண்டில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 2004–ம் ஆண்டில் அரசியல் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை.

2010–ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது மக்கள் முன் தோன்றினார். தென் ஆப்பிரிக்காவின் மக்கள் தலைவரான நெல்சன் மண்டேலாவுக்கு 1990–ம் ஆண்டு இந்தியா பாரத ரத்னா விருது வழங்கியது. 1993–ம் டிசம்பர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரை மக்கள் ‘மடியா’ என அன்புடன் அழைத்தனர். நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி விருதும் பெற்றார். மண்டேலா பிறந்த நாளான ஜூலை 18–ந் தேதியை சர்வதேச மண்டேலா தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

மரணம் அடைந்த மண்டேலாவுக்கு ஆயிரக் கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிசடங்கு அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறும் என தெரிகிறது. மண்டேலா மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உள்ளிட்ட பலர் அனுதாப செய்தி அனுப்பியுள்ளனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top