சேலையூர் அருகே பயங்கரம்:
பூட்டிய வீட்டில் என்ஜினீயர் மனைவி குத்திக்கொலை
தாம்பரம்:
சேலையூர் அருகே பூட்டிய வீட்டில் என்ஜினீயர் மனைவி மர்மமான முறையில் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
என்ஜினீயர் மனைவி
சென்னையை அடுத்த சேலையூர் அருகே செம்பாக்கம் டெல்லஸ் அவென்யூ சரோஜினி தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ரோகன் சங்கர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவருக்கு சமீபத்தில் துபாயில் வேலை கிடைத்தது. எனவே அவர் வெளிநாடு சென்று விட்டார்.
இவரது மனைவி பூஜா (வயது 30), மகள் பிட்டு என்கிற மிஸ்கா (7) ஆகியோர் மட்டும் செம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்குமுன்பு ரோகன்சங்கர் ஊருக்கு வந்து சென்றார்.
குத்திக்கொலை
நேற்றுமுன்தினம் இரவு தாயும் மகளும் வீட்டில் படுத்து தூங்கினர். பூஜா ஒரு படுக்கை அறையிலும், மிஸ்கா மற்றொரு அறையிலும் படுத்து இருந்தனர்.
நேற்று காலை சிறுமி மிஸ்கா எழுந்து பார்த்தபோது, பூஜா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அலறிய சிறுமி, ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டில் இருப்பவர்களை அழைத்து அம்மா படுக்கையறையில் ரத்தவெள்ளத்தில் கிடக்கிறார் என கூறினாள். உடனே அங்கு இருந்தவர்கள் குழந்தையை கதவை திறக்கச்சொல்லி உள்ளே சென்று பார்த்தபோது, நெஞ்சில் கத்திக்குத்து காயத்துடன் பூஜா பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இணை கமிஷனர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் அஸ்லாம் பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பூஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல் தகராறில் கொலையா?
பூஜா எப்படி இறந்தார் என தெரியவில்லை. கதவு உள்பக்கம் பூட்டப்பட்டுள்ளது. குழந்தை தான் கதவை திறந்தது. எனவே பூஜா கத்திக்குத்து காயத்துடன் பிணமாக கிடந்தது எப்படி? என்பது போலீசாருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உள்ளே இருந்து வெளியே வரும் பால்கனி கதவு மட்டும் திறந்து இருந்தது. எனவே, கொலையாளி இந்த வழியாக வந்து கொலை செய்து விட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள பூஜாவின் மரணம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போனில் உள்ள எஸ்.எம்.எஸ் மற்றும் கடைசியாக யாரிடம் செல்போனில் பேசினார் என்ற தகவல்களை சேகரித்து வருகின்றனர். எஸ்.எம்.எஸ். ஒன்றில் கடை அருகே நிற்கிறேன் என ஒரு தகவலும் வீட்டின் அருகே உள்ள தெருவில் காத்திருக்கிறேன் என மற்றொரு தகவலும் வந்துள்ளது.
பூஜாவிற்கு யாருடனாவது தொடர்பு இருந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் பூஜாவின் மர்ம மரணம் கள்ளக்காதலில் நடந்த கொலையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
0 comments