இராமேசுவரத்தில் நூதன முறையில்
ஆந்திர பக்தர்களிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்
இராமேசுவரம், நவ. 24:
இராமேசுவரம் ராமநாத சுவாமியை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். ஆந்திர மாநிலம் கொட்டுபுள்ள பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று இராமேசுவரம் வந்துள்ளனர்.
அவர்களில் பத்மா, சாவித்ரி உள்பட சிலர் அக்னி தீர்த்த கடலில் குளிக்க சென்றனர். அப்போது உறவினரான சீனிவாசனிடம் ரூ.40 ஆயிரத்தை கொடுத்துவிட்டு சென்றனர்.
தீர்த்தக் கரையில் நின்ற சீனிவாசனிடம் அய்யப்ப பக்தர் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்துள்ளார். உங்கள் பணம் கீழே கிடக்கிறது என அவர் கூறியதை நம்பி சீனிவாசன் திரும்பி பார்த்துள்ளார். அங்கு 30 ரூபாய் கிடக்கவே அதனை எடுக்க அவர் குனிந்துள்ளார்.
அந்த சமயத்தில் சீனிவாசன் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை அய்யப்ப பக்தர் போல வந்தவர் அபேஸ் செய்து சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆந்திர பக்தர்கள் ஊர் திரும்ப வழியின்றி புலம்பினர். அவர்களுக்கு யாத்திரை பணியாளர் சங்க நிர்வாகிகள் உதவி புரிந்தனர்.
0 comments