நான்காம் தமிழன் - திரை விமர்சனம்
நடிகர் : ஜெய்சந்தர், சந்துரு
நடிகை : அபி, மோனாஸ்ரீ
இயக்குனர் : ஓங்கார மூர்த்தி
இசை : யு.கே.முரளி
ஓளிப்பதிவு : எஸ்.வி.உதயகுமார்
கொடைக்கானலில் சுற்றுலாவுக்காக வரும் ஜோடிகள் தங்கும் ஒரு ஓட்டலில் அவர்கள் மர்ம முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த ஓட்டலில் தப்பான விஷயத்துக்காக தங்குபவர்கள் மட்டும் இதுமாதிரி கொல்லப்படுகிறார்கள். இதற்கு காரணம் அங்கு உள்ள ஒரு மலைமுகடுதான் என அங்கிருப்பவர்களால் நம்பப்படுகிறது.
இந்நிலையில், அந்த ஓட்டலின் உரிமையாளர் சென்னையில் இருந்து தனது பி.ஏ.வுடன் வந்து இந்த ஓட்டலில் தங்குகிறார். அங்கு இவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கொடைக்கானலுக்கு சென்ற ஓட்டல் உரிமையாளர் திரும்பி வராததால் சென்னையில் இருக்கும் அவருடைய மனைவி பதட்டமடைகிறார்.
எனவே, அவரைக் கண்டுபிடிக்க தன்னுடைய தோழியான நாயகி அபியிடம் உதவி கேட்கிறார். அபியும், அவளுடைய காதலனுமான நாயகன் சந்துருவும் இணைந்து அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகின்றனர்.
கொடைக்கானலுக்கு வரும் அவர்கள், அந்த ஓட்டலில் மேனேஜராக பணிபுரிபவர்தான் இந்த கொலைகளை எல்லாம் செய்கிறார் என்பதை கண்டுபிடிக்கின்றனர். அவர் எதற்காக இந்த கொலைகளை செய்கிறார்? அவருக்கும் ஓட்டல் உரிமையாளரின் கொலைக்கும் என்ன சம்பந்தம்? என்பதை பிளாஸ்பேக்குடன் விவரித்து முடிக்கின்றனர்.
நாயகன் சந்துரு துப்பறியும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார். நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். நாயகிகளாக அபியும், மோனஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். இருவரும் அழகு பதுமைகளாக வந்து போகிறார்கள்.
வையாபுரி, காதல் சுகுமார், நெல்லை சிவா, சுருளி மனோகர் என நட்சத்திர பட்டாளங்கள் நிறைய பேர் நடித்திருந்தாலும் யாரும் மனதில் ஒட்டவில்லை.
தற்போது நாட்டில் வளர்ந்து வரும் தகாத உறவுகளை வேரொடு அறுத்து எரியவேண்டும் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம்தான் இது. இந்த ஆழமான கருத்தை வைத்து படத்தை எடுத்ததற்காக இயக்குனர் ஓங்காரமூர்த்திக்கு எழுந்து நின்று கைதட்டலாம். மற்றபடி காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மேடை இசைக்கலைஞர் யூ.கே.முரளியின் இசை வண்ணத்தில் உருவான முதல் படம். பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும் பின்னணி இசையமைப்பில் சிரத்தை எடுத்திருக்கிறார். எஸ்.வி. உதயகுமார் ஒளிப்பதிவில் கொடைக்கானல் அழகை அழகாக படம்பிடித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘நான்காம் தமிழன்’ ஒரு பாடம்.
0 comments