கொட்டிவாக்கத்தில் பயங்கரம் கள்ளத்தொடர்பு காரணமாக
கார் டிரைவர் வெட்டிக்கொலை
துரைப்பாக்கம் :
மனைவியுடன் கள்ளத்தொடர்பை விடாததால் கார் டிரைவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த உறவினர் உட்பட 3 பேரை போலீசார் தேடுகின்றனர்.
கொட்டிவாக்கம் கந்தசாமி நகர் காமராஜர் சாலையில் வசித்தவர் செந்தில் (35). கார் டிரைவர். அப்பகுதியில் இவருக்கு சொந்தமாக 7 வீடுகள் உள்ளன. அவற்றை வாடகைக்கு விட்டுள்ளார்.
இவர் பாலவாக்கம் பெரியார் சாலையை சேர்ந்த மும்தாஜ் என்பவரை காதலித்து 7 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று மதியம் மும்தாஜ் பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது செந்தில் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது தம்பி ஏழுமலை, அப்பகுதி மக்கள் ஓடிவந்து பார்த்தனர். வீட்டில் இருந்து அவரது பெரியப்பா மகன் சுகுமாறன் மற்றும் 2 பேர் வெளியே ஓடினர். அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் செந்தில் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து துரைப்பாக்கம் உதவி கமிஷனர் (பொறுப்பு) முகமது அஸ்லாம், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், புஷ்பராஜ் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
தங்களுக்கு குழந்தை இல்லாததால் இடம் மாறி பார்க்கலாம் என்று கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பெரியப்பா மகன் சுகுமாறன் வசிக்கும் அதே பகுதியில் உள்ள நியூ காலனியில் மேல்மாடியை வாடகைக்கு எடுத்து செந்திலும் மும்தாஜும் தங்கினர். அப்போது சுகுமாறனின் மனைவி லட்சுமிக்கும் செந்திலுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது சுகுமாறனுக்கு தெரிந்து தகராறு ஏற்படவே அந்த வீட்டை காலி செய்துவிட்டு திரும்பினர்.
எனினும் லட்சுமியுடன் உள்ள தொடர்பை செந்தில் விடவில்லை. பலமுறை சுகுமாறன் கண்டித்தும் நீடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் நண்பர்கள் 2 பேருடன் நேற்று பைக்கில் செந்தில் வீட்டுக்கு வந்துள்ளனர். எதிரில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு உட்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு செந்திலை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுகுமாறன் உட்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments