பீகாரில் மோடி கூட்ட மைதானம் உள்பட 6 இடத்தில் குண்டுவெடிப்பு
பாட்னா, அக்.27:
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதான பொதுக்கூட்டத்தில் இன்று மாலை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய ஜனதா தொண்டர்கள் ரெயில்களிலும், பஸ்களிலும் அங்கு வந்த வண்ணம் உள்ளனர். அக்கூட்டத்தில் பேச நரேந்திர மோடி பாட்னா வந்து சேர்ந்துள்ளார்.
அவர் வந்து சேர்ந்த சில நிமிடங்களிலேயே அவர் பேசவுள்ள காந்தி மைதானத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், ரெயில் நிலையம், சினிமா தியோட்டர் முன்புறம் என 6 இடங்களில் இன்று குண்டுகள் வெடித்தன. இதில் பாட்னா ரெயில் நிலைய கழிவறை குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற இடங்களில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உடனே ரெயில்வே பாதுகாப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும், அங்கு இரு இடங்களில் வெடிக்கப்படாத நாட்டு குண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை செயல் இழக்க செய்தபோது ஒரு போலீசாரும் காயமடைந்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் இந்த குண்டு வெடிப்பை கண்டித்துள்ளார். மேலும் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களையோ அல்லது இயக்கத்தையோ உடனடியாக நீதிமுன் நிறுத்தி நடவடிக்கை எடுக்கவும், சட்ட ஒழுங்கை பராமரிக்கவும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரை மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் பீகார் போலீசாருக்கு உதவ தேசிய புலனாய்வு அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
நரேந்திரமோடி பாட்னாவில் பேச இருக்கும் நிலையில் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்ததன் மூலம் அவரது கூட்டத்தை சீர்குலைக்கவும், தொண்டர்கள் வருகையை தடுக்க நடந்த சதியாக இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
0 comments