இராமநாதபுரம் அருகே ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துடன்
தாய்–மகன் கடத்தல்: பஸ் டிரைவர் மீது புகார்
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் பகுதி ஆத்மநாதசுவாமி நகரில் வசிப்பவர் பூமி நாதன் (வயது 58). இவரது மகள் மாரி (வயது 30). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார்.
அதன்பிறகு 5 வயது மகன் கமலேசுடன் தந்தை வீட்டிலேயே மாரி வசித்து வந்துள்ளார். அப்போது உச்சிப்புளி அருகே உள்ள ஒரு கோவிலுக்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம்.
பட்டணம்காத்தானில் இருந்து குறிப்பிட்ட தனியார் பஸ்சில் அவர் சென்று வந்த போது பஸ்சின் டிரைவர் உதயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாரி தனது 5 வயது மகனுடன் திடீர் என மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தந்தை பூமிநாதன் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்துடன் தனது மகள் மற்றும் பேரனை பஸ் டிரைவர் உதயகுமார் கடத்திச்சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் முனியாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய்–மகனை தேடி வருகின்றனர்.
0 comments