9 September 2013

இந்திய நகரங்களில் பெருகிவரும் தண்ணீர் பற்றாக்குறை

இந்திய நகரங்களில் பெருகிவரும் தண்ணீர் பற்றாக்குறை




புதுடெல்லி, செப். 09:-


இந்தியாவில் மக்களின் அதிகரித்து வரும் தேவைகளில் தண்ணீரும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் தண்ணீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட முடியவில்லை. அரசு அறிக்கையின்படி நாட்டின் முக்கியமான 32 நகரங்களில் 22 நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றன.

கான்பூர், அசன்சோல், தன்பாத், மீரட், பரிதாபாத், விசாகப்பட்டினம், மதுரை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் 30 சதவிகிதம் பற்றாக்குறை உள்ளது. இதில், ஜாம்ஷெட்பூரில் அதிகபட்சமாக 70 சதவிகிதம் தேவைகள் பூர்த்தி செய்யப்படமுடியவில்லை.

கிரேட்டர் மும்பை மற்றும் டெல்லி நகரங்களின் தேவை அதிகமாயுள்ள போதிலும், அவை பெரும்பாலும் நிறைவேற்றப்படுகின்றன. கணக்களவில் டெல்லி நகரத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறை 24 சதவிகிதமாகவும், மும்பை நகரத்தின் பற்றாக்குறை 17 சதவிகிதமாகவும் காட்டப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, டெல்லியின் தேவையான 4,158 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு 3,156 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படுகின்றது. ஆயினும்,இதில் 40 சதவிகிதம் விநியோகத்தின்போது வீணாக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நகரத்தின் பற்றாக்குறையைவிட வீணாகும் தண்ணீரின் சதவிகிதம் அதிகமாக உள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. அரசுக் கணக்கீடுகளில் காணப்படுவதைவிட தண்ணீர் விநியோகம் பல நகரங்களில் குறைவாக இருக்கக்கூடும். அதற்குக் காரணம் தவறான பொறியியல் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளும்தான்.

சில இடங்களில் நீர்வரத்தே குறைவாக இருப்பதுவும் பிரச்சினைகளை அளிக்கின்றது என்று நீர் ஆதார நிர்வாக வல்லுனராக இருக்கும் திலிப் பவுஸ்தார் தெரிவிக்கின்றார். நகரங்களின் நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்வதும் இந்த பற்றாக்குறைகளைச் சமாளிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

10 நகரங்களின் தண்ணீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாகவும் அல்லது தேவையை விட அதிகக் கையிருப்பு கொண்டதாகவும் அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. இதில், 52 சதவிகிதம் அதிகப்படியான நீர் ஆதாரங்களுடன் நாக்பூர் முதலிடத்தைப் பிடிக்கின்றது.

பஞ்சாபின் தொழில்நகரமான லூதியானாவில் 26 சதவிகிதம் அதிகப்படியான நீர் இருப்பு உள்ளது. இதுபோல் தன்னிறைவு கொண்ட நகரங்களாக வதோதரா, ராஜ்கோட், கொல்கத்தா, அலகாபாத் மற்றும் நாசிக் விளங்குகின்றன.

நகரங்களின் மக்கள் தொகை அதிகரித்துப் பல வருடங்களுக்குப் பின்னர் குடிநீர்த் திட்டங்களைப் பற்றி யோசிக்கும் இடங்களிலேயே இதுபோன்ற பற்றாக்குறைகள் நிலவுவதாகக் கூறும் அரசின் அறிக்கை, குர்கானின் அபரிமிதமான வளர்ச்சிக்குப் பின்னரே 15-20 வருடங்கள் கழித்து, அந்நகரின் மிகப் பெரிய நீர் ஆதாரம் அமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றது.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top