வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஆட்டம்: இந்திய 'ஏ' அணி தோல்வி
பெங்களூர், செப்.18:-
இந்தியா 'ஏ'-வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய ஏ கேப்டன் யுவராஜ்சிங் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கீரன் பவெல் (4 ரன்), பிளட்செர் (15 ரன்) ஏமாற்றிய போதிலும் இடக்கை பேட்ஸ்மேன் ஜோனதன் கார்ட்டர் தனிவீரராக, இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் துவம்சம் செய்தார். கிர்க் எட்வர்ட்ஸ் (36 ரன்), லியோன் ஜான்சன் (39 ரன்) உதவியுடன் சதத்தை பூர்த்தி செய்த 25 வயதான கார்ட்டர் 133 ரன்கள் (132 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த நிலையில் உனட்கட்டின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்தது.
அடுத்து ஆடிய இந்திய ஏ அணியால் வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை சமாளித்து இலக்கை நோக்கி துரிதமாக முன்னேற முடியவில்லை. முந்தைய ஆட்டத்தின் நாயகனும், கேப்டனுமான யுவராஜ்சிங் 40 ரன்களில் (58 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அவருக்கு அடுத்தபடியாக உன்முக் சந்த் 38 ரன்களும், கெதார் ஜாதவ் 35 ரன்களும், நமன் ஓஜா 34 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் யூசுப் பதான் டக்-அவுட் ஆனார். முடிவில் இந்திய ஏ அணி 48.4 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை ருசித்தது. இந்திய பேட்ஸ்மேன்களை வெகுவாக கட்டுப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் மிக்யூல் கம்மின்ஸ் 10 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மோசமான பீல்டிங்கே தோல்விக்கு காரணம் என்று இந்திய ஏ அணியின் கேப்டன் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
கார்ட்டர் 6 ரன்னில் நின்ற போது, ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை யூசுப் பதான் வீணடித்தார். இதே போல் அவர் 66 ரன்னில் இருந்து போது கிடைத்த ரன்-அவுட் வாய்ப்பையும் கோட்டை விட்டனர். ''எங்களது பீல்டிங் நன்றாக அமையவில்லை. கார்ட்டரின் கேட்ச்சை தவற விட்டது, பெரும் பின்னடைவாக அமைந்தது. அவர்களை நாங்கள் 260 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கடைசி 10 ஓவர்களில் எங்களது பந்து வீச்சும் சரியில்லை.'' என்று யுவராஜ்சிங் குறிப்பிட்டார்.
வெஸ்ட் இண்டீசின் வெற்றியின் மூலம் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
0 comments