கமுதி அருகே பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை
கமுதி:
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள இடி விலகி பகுதியை சேர்ந்தவர் கொத்தாண்டிதேவர். இவரது மனைவி மீனாள் (வயது 75). இவரது மகள் முத்துஇருளாயி. இவருக்கு திருமணம் ஆகி விட்டது. மதுரை காமராஜர்புரத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கொத்தாண்டிதேவர் இறந்து விட்டார். மீனாள் கூலி தொழில் செய்து தனிமையில் வசித்து வந்தார்.
நேற்று இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினார். நள்ளிரவு ‘மர்ம’ ஆசாமி வீட்டுக்குள் புகுந்தான். பின்னர் அவன் தூங்கி கொண்டிருந்த மீனாள் கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினான். இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அந்த ஆசாமி மீனாள் கழுத்தில், காதில் கிடந்த 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டான்.
இன்று காலை மீனாள் வீட்டு கதவு திறந்து இருந்தது. உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு மீனாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் கோவிலான்குளம் போலீசில் புகார் செய்தனர். கமுதி ஏ.டி.எஸ்.பி. விக்ரமன், இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
மீனாளை கொன்று நகைகள் கொள்ளையடித்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.
0 comments