ஆத்தூரில் ரோட்டோர கடையில் சாப்பிட்ட நடிகர் அஜித்
சேலம், ஆக. 19:
நடிகர் அஜித் நேற்று இரவு ரோட்டோர கடையில் சாப்பிட்டார். இதையடுத்து அங்கு ரசிகர்கள் திரண்டனர்.
நடிகர் அஜித்குமார் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று மதியம் அவர் சென்னையில் இருந்து புதியதாக வாங்கிய தனது பி.எம்.டபள்யூ., நிறுவனத்தின் ரூ. 24 லட்சம் மதிப்புள்ள டுக்காட்டி மோட்டார் சைக்கிளில் தலைவாசல் வழியாக இரவு 9 மணியளவில் ஆத்தூர் காட்டுக்கோட்டைக்கு வந்தார்.
அப்போது காட்டுக் கோட்டை சாலையோரத்தில் உள்ள கிராமத்து ஓட்டலில் தனது உதவியாளர்களுடன் சாப்பிட்டார். பந்தய ஆடை அணிந்து வந்து கிராமத்து ஓட்டலில் சாப்பிட்ட அவரை ரசிகர்கள் கண்டு பிடித்து குவிந்தனர்.
அவர்கள் அஜித்குமாருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர் அனைவரையும் நலம் விசாரித்து உணவு அருந்தும்படி கூறினார். இதுப்பற்றி தெரிந்ததும் நிருபர்கள், போட்டோ கிராபர்களும் அங்கு திரண்டனர். அவர்களிடம் நடிகர் அஜித் கூறும் போது, சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்வதாக கூறினார். அவர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சுமார் 30 நிமிட நேரம் அங்கு இருந்த அஜித் 9.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்சார் பொருத்திய ஹெல்மட் அணிந்து கொண்டு ஆத்தூர், வாழப்பாடி, பைபாஸ் வழியாக சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்.
2 கார்களில் உதவியாளர்கள் மற்றொரு பைக்கில் வந்த உதவியாளர்கள் உள்பட 8 பேர் 20 நிமிட இடைவெளியில் அஜித்குமாரை பின் தொடர்ந்து சென்றனர்.
0 comments