மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கு:
என்ஜினீயர் மாணவர்கள் 3 பேரிடம் விடிய, விடிய விசாரணை
திருச்சி, ஆக. 18:
திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவரது மனைவி மெகபூனிசா. இவர்களுடைய மகள் தவ்பிக் சுல்தானா மேலபுதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13–ந்தேதி பள்ளிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து 14–ந்தேதி காலையில் எடமலைப்பட்டி புதூர் இரட்டை மலை ரெயில்வே தண்டவாளம் அருகே உடல் பல துண்டுகளாக சிதறிய நிலையில் மாணவி பிணமாக கிடந்தார்.
இதில் மாணவி பல துண்டுகளாக பஸ் போக்குவரத்தே இல்லாத பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்ததால் அவரை மர்ம நபர்கள் அழைத்து சென்று பலாத்காரம் செய்து கொலை செய்து உள்ளனர் என்று மாணவியின் பெற்றோர் மற்றும் த.மு. மு.க.வினர் புகார் கூறினர்.
இதைதொடர்ந்து இதில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க கேட்டு பிரேத பரிசோதனை முடிந்த நிலையிலும் மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் த.மு.மு.க.வினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, மாணவியின் தாய் மற்றும் த.மு.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாணவி தவ்பிக் சுல்தானாவின் உடலை வாங்கி இறுதி சடங்குகளை செய்தனர். இதனால் கடந்த 5 நாட்களாக திருச்சி மாநகரில் ஏற்பட்ட பரபரப்பு தற்போது அடங்கியுள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு ரெயில்வே போலீசில் இருந்து எடமலைப்பட்டி புதூர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் வழிகாட்டுதலின் பேரில் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், சேரன், சித்ரா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் காஜாமலையை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவரான உமர்பாருக், எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த பாலிடெக்னிக் 3–ம் ஆண்டு மாணவர் விக்னேஷ் ஆகியோர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது மேலும் கல்லூரி மாணவர்கள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததது.
இதையடுத்து பொன்மலைப் பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் வினோத்குமார், எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் அலெக்சாண்டர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதையடுத்து உமர்பாருக்கிடம் எழுதி வாங்கிவிட்டு எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் வினோத்குமார், விக்னேஷ், அலெக்ஸ்சாண்டர் ஆகியோரிடம் போலீசார் நேற்று பகலிலும், நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை விடிய விடியவும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது வினோத்குமார் மயங்கி விழுந்தார். உடனே போலீசார் டாக்டரிடம் அழைத்து சென்று வினோத்குமாருக்கு சிகிச்சை அளித்து பின்னர் விசாரணையை தொடர்ந்தனர்.
இதில் போலீசாருக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் புது தெம்புடன் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். எனவே இன்று அல்லது நாளைக்குள் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
0 comments