தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில் 3-வது நாளாக பந்த்
நகரி, ஆக. 2:
ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த 72 மணி நேர பந்த் பேராட்டத்துக்கு ஐக்கிய ஆந்திர கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்தது.
இதையடுத்து கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளடங்கிய சீமாந்திரா பகுதியில் நேற்று முன்தினம் முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இப்பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பஸ்கள் இயக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக சில பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தர்ணா, சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
நடுரோட்டில் டயர்களை போட்டு தீவைத்து சாலை களை மறித்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல்- தடியடி சம்பவங்கள் நடந்தது. வலுக்கிறது தெலுங்கானாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. பந்த் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது. பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கடப்பÖவில் மட்டும் ரம்ஜான் நோன்புக்கான கடைசி வெள்ளி என்பதால் கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. ஆனால் வாகன போக்குவரத்து நடக்கவில்லை.
அனந்தபுரத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக இருந்தது. இங்குள்ள ஸ்ரீகிருஷ்ண தேவராயர் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று நள்ளிரவு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே பந்த் காரணமாக இந்த சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. நள்ளிரவில் போக்குவரத்தை சீர்செய்ய போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இதை அறிந்த மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சாலையில் அமர்ந்து கொண்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். ஆனாலும் அவர்கள் சாலையை விட்டு நகரவில்லை.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பல ரெயில்கள் வழித்தடத்தை மாற்றி இயக்கப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம், திருப்பதி, விஜயவாடா, குண்டூர் ஆகிய இடங்களுக்கு செல்ல ரெயில் டிக்கெட் எடுத்தவர்கள் அதனை ரத்து செய்துவிட்டனர். 2 நாளில் மட்டும் 11 ஆயிரம் பேர் தங்கள் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்துவிட்டனர். செகந்திராபாத் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது.
மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்களே காரணம் என குற்றம் சாட்டி மந்திரிகள், எம்.பி.க்கள் வீடுகளை போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மேலும் அவர்களின் கொடும் பாவிகளை எரித்தனர். மக்களின் கோபத்துக்கு பயந்து மந்திரிகள் காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் பதவி களை ராஜினாமா செய்து வருகிறார்கள். கர்னூல் கிழக்கு கோதாவரியில் ராஜீவ் காந்தி சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்தினர்.
இதேபோல் கடப்பாவில் இந்திரா காந்தி சிலையை தீவைத்து எரித்தனர். பலமநேரியில் நேரு சிலையை உடைத்து எரித்தனர். அனந்தபுரத்தில் ராஜீவ் காந்தி சிலையை சம்மட்டி கொண்டு துண்டு துண்டாக உடைத்தனர். சிலையின் தலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் சிலை உடைத்தெறியப்பட்டது. மாநிலம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் போராட்டத்தை அவர்களால் அடக்க முடியவில்லை. இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
0 comments