தேவிபட்டிணம் அருகே வீட்டில் பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல்
இராமநாதபுரம், ஜூலை. 21:
தேவிபட்டிணம் அருகே வீட்டில் பதுக்கிய 40 ஜெலட்டின் குச்சிகள், 20 டெட்டனேட்டர்கள் மற்றும் ஒயர் போன்றவற்றை 'கியூ' பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக கடலோர பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், ஆயுதங்கள் வருவதை தடுக்கவும் 'கியூ' பிராஞ்ச் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே உள்ள திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கப்பட்டு இருப்பதாக 'கியூ' பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் 'கியூ' பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வீடு, வீடாக நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது ஒரு வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 40 ஜெலட்டின் குச்சிகள், 20 டெட்டனேட்டர்கள் அவற்றுடன் பயன்படுத்த 5 மீட்டர் ஒயர் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இவற்றை பதுக்கியதாக அகமதுகான், செந்தில்குமார், தவமணி ஆகியோரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0 comments