இராமநாதபுரத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை
இராமநாதபுரம், ஜூன். 18:
இராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர் ராமநாதபுரத்தில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பானு (வயது 45). இவர் வாணி கிராமத்தில் உள்ள வீட்டில் மருமகள் ரெசிமா (26)வுடன் இருந்தார். இன்று பகல் அவர்கள் வீட்டிலிருந்தபோது “மர்ம” கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பானுவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவத்தின்போது கொலைகாரர்களை தடுக்க வந்த ரெசிமாவுக்கும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. கொலை சம்பவத்தை நிறைவேற்றியதுடன் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. கொலை குறித்த தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளிதரன் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொலை யாளிகளை பிடிக்க போலீஸ் மோப்பநாயும் சம்பவ இடம் வரவழைக்கப்பட்டது.
0 comments