இந்தியன் பிரிமியர் லீக் தலைவர் பதவியிலிருந்து ராஜிவ் சுக்லா ராஜினாமா
புதுடில்லி:
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் வெளியானதை தொடர்ந்து, அந்த அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ராஜிவ் சுக்லா ராஜினாமா செய்துள்ளார்.
இதனிடையே, சீனிவாசனுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் வகையில், இதுவரை அவருக்கு ஆதரவாக பேசி வந்த, ராஜிவ் சுக்லா இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். ஸ்பாட் பிக்சிங் விவகாரம் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை பி.சி.சி.ஐ., அவசரக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ராஜிவ் சுக்லா, ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது ராஜினாமா குறித்து அவர் கூறுகையில், "இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். பதவி விலகுவது குறித்து கடந்த சில நாட்களாக ஆலோசனை செய்து வந்தேன். இதுவே பதவிவிலக சரியான நேரம்" என பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அவர், "சஞ்சய் ஜக்தாலே, அஜய் ஷிர்கே ஆகியோர் கிரிக்கெட் நலன் கருதி தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நானும் பதவி விலக இதுவே சரியான நேரம். இந்தியன் பிரிமியர் லீக் தலைவராக நியமிக்கப்பட்ட நான், எனது கடமையை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி செய்தேன். பல சர்ச்சைகளை கடந்து தொடர் நடத்தப்பட்டது. மைதானத்தில் கூடிய ரசிகர் கூட்டத்திலிருந்து இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கு இன்னும் ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது. எனக்கு வழங்கப்பட்ட பதவி மீது அதிக ஆசைப்பட்டதில்லை. மாறாக எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற முயற்சி செய்தேன்" என கூறினார்.
0 comments