அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்
அனுப்பிய
அந்நாட்டுத் தொலைக்காட்சி நடிகை கைது
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் நியூயார்க் மேயருக்கு விஷம் தடவிய கடிதங்களை அனுப்பிய அந்நாட்டுத் தொலைக்காட்சி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது குறித்து ஒபாமா அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய கடிதம், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் நியூயார்க் நகர மேயர் மைக்கேல் புளூம்பர்க் ஆகியோருக்கு கடந்த 20ம் தேதி அனுப்பப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்களில் ரிசின் எனப்படும் விஷம் தடவப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ., சந்தேகத்தின் பேரில், டெக்சாஸைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஷன்னான் ரோஜர்ஸ் ரிச்சர்ட்சன் என்பவரிடம் விசாரணை நடத்தியது. அப்போது, தனது கணவர்தான் விஷம் தடவிய கடிதங்களை அனுப்பியதாக அவர் தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், ஒபாமாவுக்கும், நியூயார்க் மேயருக்கும் விஷம் தடவிய கடிதங்கள் அனுப்பியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, நடிகை ஷன்னான் ரிச்சர்ட்சன் கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதேபோல், மிஸிசிப்பியைச் சேர்ந்த ஜேம்ஸ் எவர்ரெட் என்பவர், ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியதாக இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments