மோதிக்கு முக்கியத்துவம்:
பா.ஜ.கவின் கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்தார் அத்வானி
பாரதிய ஜனதா கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க., ஆட்சி மன்றக் குழு, தேர்தல் குழு, செயற்குழு ஆகியவற்றில் இருந்தும் அத்வானி விலகியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் ராஜினாமா கடிதத்தை அத்வானி வழங்கினார். இனி கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே அவர் இருப்பார்.
அண்மையில் கோவாவில் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாரதிய ஜனதாவின் பிரசாரக் குழு தலைவராக குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோதி தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே , மோதிக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என பா.ஜ.க., வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், மூத்த தலைவர்கள் அத்வானி, யஷ்வாந்த் சின்ஹா, உமா பாரதி ஆகியோர் கோவா செயற்குழு கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
மோதி பா.ஜ.க., வின் நாடாளுமன்றத் தேர்தல் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதும், அத்வானி உள்ளிட்டோர் செயற்குழு கூட்டத்தைப் புறக்கணித்ததும் தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மோதி தேர்வு செய்யப்பட்ட அடுத்த நாளே அத்வானி கட்சியின் பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அத்வானியின் இந்த ராஜினாமா அறிவிப்பு பா.ஜ.கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் பாரதிய ஜனதா கட்சி மேலிடம், அத்வானியின் ராஜினாமா அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மோதி ட்வீட் என்னாச்சு?
பா.ஜ.க., வின் நாடாளுமன்றத் தேர்தல் குழு தலைவராக மோதி நியமிக்கப்பட்ட பிறகு ட்விட்டர் சமூக வலை தளத்தில் வெளியிட்ட ட்வீட்டில் தான் அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், அப்போதும் அத்வானி தனக்கு ஆசிகளையும், ஆதரவுகளையும் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
ஆனால் மோதி தேர்வு செய்யப்பட்ட மறுநாளிலேயே அத்வானி ராஜினாமா செய்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அத்வானி ராஜினாமா.. காங்கிரசுக்கு சாதகமா?!
அத்வானி ராஜினாமா செய்துள்ளது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் அத்வானியின் இந்த ராஜினாமா அறிவிப்பு பாரதிய ஜனதா கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும் என தெரிவித்துள்ளனர்.
தலைவர்களின் முதல் கருத்து:
பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பா.ஜ.க., உறுப்பினர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அத்வானியின் ராஜினாமா பாரதிய ஜனதா கட்சியின் வீழ்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
அத்வானியில் விலகல் பா.ஜ.க.,வுக்கு கட்சியின் கட்டமைப்பு ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலளரான டி.ராஜா தெரிவித்துள்ளார்.
பாதை மாறிச் செல்கிறது பா.ஜ.க., : அத்வானி
தனது ராஜினாமா குறித்து விளக்கமளித்துள்ள அத்வானி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பலர் தங்கள் சொந்த நலனில் தான் அக்கறை கொண்டுள்ளனர். வாஜ்பாய் உள்ளிட்டோர் உருவாக்கிய கொள்கைகள் பா.ஜ.க.,வில் தற்போது இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.















0 comments