22 June 2013

உத்தரகாண்ட் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழக பக்தர்கள் 83 பேர் சென்னை திரும்பினார்கள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடான கோடி நன்றி

உத்தரகாண்ட் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 
தமிழக பக்தர்கள் 83 பேர் சென்னை திரும்பினார்கள் 
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடான கோடி நன்றி
சென்னை:
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழக பக்தர்கள் 83 பேர் பாதுகாப்பாக  சென்னை திரும்பினார்கள்.
அவர்களுக்கான விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. இதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பக்தர்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள்
உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக திரும்பி வர முடியாமல் சிக்கித் தவிப்பது குறித்தும், அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உயர்மட்டக் குழு
இந்தக் கூட்டத்தில், தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் பக்தர்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு சிறப்புப் பிரதிநிதியின் தலைமையில், டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர், தமிழ்நாடு வருவாய்த் துறைச் செயலாளர் மற்றும் மாநில நிவாரணம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழு உத்தரகாண்ட் மாநில தலைமையகமான டேராடூனுக்கு உடனடியாக சென்று அவர்களை மீட்டு தமிழகத்திற்கு விமானம் மூலம் அழைத்து வர வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
உணவு, தங்குமிடம்
இதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 83 பக்தர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உணவு வசதியுடன் தங்க வைக்கப்பட்டதுடன், டெல்லியில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானம் மூலம் நேற்று மதியம் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றபோது இயற்கை இடர்பாட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை எடுத்துக்கூறி, தங்களுக்கு உணவு, தங்குமிடம் அளித்ததோடு விமானம் மூலம் உடனடியாக தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுத்ததற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பக்தர்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
வீட்டுக்கு அழைத்துப் போக ஏ.சி.பஸ்கள்
சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 83 பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதுடன், சென்னையைச் சேர்ந்த 67 யாத்திரிகள் 4 குளிர்சாதன பஸ்கள் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 16 பக்தர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு கட்டணமில்லாமல் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கட்டித்தழுவி, முத்தமிட்டு உணர்வுப்பூர்வ வரவேற்பு
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் பெருமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிய பக்தர்கள் மத்திய, மாநில அரகளின் உதவியால் நேற்று முன்தினம் பத்திரமாக டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்களை அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. அதன்படி, முதல்கட்டமாக நேற்று பகல் 1 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் 83 பக்தர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் வருகையை எதிர்பார்த்து அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் சென்னை விமான நிலையத்தில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளுடன் தயாராக இருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும், அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உணர்வு பொங்க வரவேற்றனர். இந்த நெகிழ்வான சம்பவம் அனைவரது கண்களிலும் கண்ணீர் வரச் செய்தது.
அழுகையும், ஆனந்தமும்
டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்ட பக்தர்களுக்கும், அவர்களை வீட்டுக்கு அழைத்துப் போவதற்காக வந்திருந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மதிய சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கூறுகையில் 10 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் நம்ம ஊர் சாப்பாடு சாப்பிடுகிறோம் என்று ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு பக்தர்கள் வந்தபோது, குடும்பத்தினரைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் நிம்மதி பெருமூச்சி விட்ட அவர்கள், மதிய சாப்பாட்டிற்குப் பிறகு உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்கு நன்றி
பத்திரமாக சென்னை வந்து சேர்ந்த பக்தர்கள் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘நாங்கள் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறோம். நாங்கள் திரும்பி வருவோமா? எங்கள் குடும்பத்தினரைப் பார்ப்போமா? என்று பீதியில் இருந்தோம். அந்த நேரத்தில்தான் தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியது. பெரும் சிரமப்பட்டு டெல்லி வந்து சேர்ந்த எங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்தனர். நாங்கள் பாதுகாப்பாக வீடு வரை செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து கொடுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கண்ணீர்மல்க கூறினர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top