4 ஆண்டுகளில் 80 ஆபரேஷன்
விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி தான மோசடி
தர்மபுரி :
கிட்னி தான மோசடி விவகாரம் விஸ்வரூபமாக கிளம்பியுள்ளது. இதில் சேலம் டாக்டர் கைது செய்யப்பட்டார். ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். கிட்னி தான மோசடியில் புரோக்கர்களான அய்யாவு, பாலசுப்ரமணியம், சீனிவாசன், ஷாஜகான், வடிவேல், சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கடந்த 10 ஆண்டாக சிறுநீரக பாதிப்புள்ள நோயாளிகளிடம் பேரம்பேசி ஏழை மக்களிடம் பணத்தாசை காண்பித்து பல லட்சம் ரூபாய் கமிஷனாக சுருட்டியது அம்பலமானது.
இந்த வழக்கு தொடர்பாக அய்யாவு கொடுத்த தகவலின் பேரில் சேலத்தை சேர்ந்த பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வந்த நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் கணேசன் (40) என்பவரை தர்மபுரி தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். 4 ஆண்டுகளில் 80 ஆபரேஷன்: அப்போது டாக்டர் கணேசன் போலீசாரிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்: 15 ஆண்டு மருத்துவ பணியில் கடந்த 4 வருடங்களாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறேன். கிட்னி கொடுக்க அய்யாவு அழைத்து வருபவர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பது எனக்கு தெரியும்.
ஆளுக்கு தகுந்தாற் போல் ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை எனக்கு பணம் கிடைத்து விடுவதால் சட்டரீதியாக செய்வதாக ஆவணங்கள் தயாரித்து அறுவை சிகிச்சை செய்து வந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 80க்கும் மேற்பட்ட கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இதுவரை யாரும் என்மீது புகார் கூறியதில்லை,‘‘ என்றார்.
அவரிடம், விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பென்னாகரத்தை சேர்ந்த காத்தவராயன் என்பவர் கிட்னி மோசடி குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் டாக்டர் கணேசனை தனிப்படை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கிட்னி மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. இதனிடையே தனிப்படையினர் நேற்று காலை சேலத்தில் அவர் பணியாற்றிய 2 மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் புரோக்கர் அய்யாவுவின் மனைவி சரஸ்வதி, சித்ரா என்ற வேலுமணி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டிரைவர் சரண்: சேலம் கந்தம்
பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிபாஸ்கர் (35). இவர், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு கிட்னி மோசடி விவகாரத்தில் சிக்கிய தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். விசாரணையில், இவரும் புரோக்கராக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், சேலம் ஜேஎம்,2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் லட்சுமி முன்னிலையில் ஹரிபாஸ்கர் நேற்று சரணடைந்தார். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மாமனாரிடமும் புதுசேரியில் எம்பிபிஎஸ் படித்து வரும் அவரது மனைவியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments