காட்டில் வீசப்பட்ட 25 வயது பெண்ஆசிரியை சடலம் மீட்பு
திருமயம் :
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த அரிமளம் அருகே கண்ணங்காரைக்குடி காட்டில் 25 வயது பெண் சடலம் கிடந்தது. விஏஓ பூமிநாதன் நேற்று கொடுத்த புகாரின்பேரில் திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணமாக கிடந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்தன.
இதனால், அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சடலம் கிடந்த இடத்தை விட்டு சிறிது தூரம் சென்ற மோப்ப நாய், மீண்டும் அதே இடத்துக்கே வந்து நின்றது. பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், திருமயம் அருகே பிணமாக கிடந்தவர் புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த சிவசந்தானம் மகள் தனபாக்கியம் (25) என்பது தெரிய வந்துள்ளது. இவர் அரிமளம் அருகே பெருங்குடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இரு தினங்களுக்கு முன் பள்ளிக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் காந்திநகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். திருமயம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments