இலங்கை கடற்படை அத்துமீறலால் மீண்டும்
ராமேஸ்வரம் மீனவர்கள்
24 பேர் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம், ஜூன் 5:
சர்வதேச கடல் எல்லை அருகில் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. கச்சத்தீவு பகுதியில் தங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்கவேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இதை கண்டுகொள்ளாத இலங்கை அரசு, கச்சத்தீவைச் சுற்றி போர்க்கப்பல்களை நிறுத்தி தமிழக மீனவர்களை அச்சுறுத்தி வந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். அவரது உரை இன்று முதல்வர்கள் மாநாட்டில் வாசிக்கப்பட்டது.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். கடலுக்குச் சென்ற அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 6 படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றதால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் செய்துள்ளனர்.
0 comments