தங்கச்சிமடத்தில் சொத்து தகராறில் மோதல்:
தந்தை மகன்கள் உள்பட 5 பேர் கைது
தங்கச்சிமடம், ஜன. 17:
இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்தவர் ஜெபமாலை. இவரது மகன்கள் வெனிஸ்டன் (வயது26), ஆஸ்வால்ட் (24). இவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்ட மகன்கள், உறவினரான எம்.ஜி.ஆர். நகர் தேவதாசிடமும் முறையிட்டனர். அவர் இது தொடர்பாக ஜெபமாலையை சந்தித்து பேச திட்டமிட்டார்.
ஆனால் அவரது மகன்கள் காரல் மார்க்ஸ் (30), சார்லி (27) ஆகியோர் தேவதாசை கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் தனது மகன்களுடன் சென்று ஜெபமாலையை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது.
இதில் ஜெபமாலை மற்றும் அவரது மகன்கள் ஒரு தரப்பாகவும், தேவதாஸ் அவரது மகன்கள் ஒரு கோஷ்டியாகவும் சேர்ந்து மோதிக் கொண்டனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த ஆஸ்வால்ட், பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் தீ வைத்து வீசியுள்ளார். இதில் அங்கிருந்த ஒரு குடிசை வீடு தீப்பிடித்தது. இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அனைத்துவிட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் தங்கச்சிமடம் பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோதல் குறித்து தேவதாஸ் மற்றும் ஜெபமாலை தனித்தனியாக போலீசில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தி ஜெபமாலை, அவரது மகன் வெனிஸ்டன், தேவதாஸ் அவரது மகன்கள் காரல் மார்க்ஸ், சார்லி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ஆஸ்வால்டை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
0 comments