13 December 2013

சென்னையில், சர்வதேச படவிழா: கமல்ஹாசன்–அமீர்கான் தொடங்கி வைத்தார்கள்

சென்னையில், சர்வதேச படவிழா: 
கமல்ஹாசன்–அமீர்கான் தொடங்கி வைத்தார்கள்
 



சென்னை, டிச.13:

           சென்னையில், சர்வதேச படவிழாவை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.

சர்வதேச படவிழா

11–வது சர்வதேச படவிழா, சென்னையில் இன்று தொடங்கியது. இதன் தொடக்க விழா, சென்னை ஆரிங்டன் ரோட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் இன்று இரவு நடந்தது. விழாவை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.

விழாவையொட்டி நடிகைகள் ஷோபனா, சுவர்ணமால்யா ஆகிய இருவரின் நாட்டிய நிகழ்ச்சிகளும், பின்னணி பாடகர் கார்த்திக்கின் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றன.



கேள்வி–பதில்

விழாவின் ஒரு நிகழ்ச்சியாக கமல்ஹாசனிடம் நடிகர்கள் சூர்யா, பார்த்திபன், டைரக்டர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் சில கேள்விகளை கேட்டு இருந்தார்கள். அந்த கேள்விகளை நடிகை சுஹாசினி மேடையில் படிக்க, அவற்றுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

சுஹாசினி படித்த கேள்விகளும், கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் ஆகிய படங்களை ‘ரீமேக்’ செய்வதாக இருந்தால், எந்த படத்தில் நடிக்க விரும்புவீர்கள்?

பதில்:– என்ன வேடம் என்று கேட்கவில்லையே...

கேள்வி:– ஜாக்சன்துரை?

பதில்:– ஜாக்சன்துரையாக நடிக்கலாம். ஏனென்றால், ‘தசாவதாரம்’ படத்தில் ஏற்கனவே ‘ஸ்லெட்சர்’ ஆக நடித்து இருக்கிறேன். ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில், சுப்பிரமணிய சிவாவாக நடிக்க ஆசை. ஏனென்றால் அந்த வேடத்தில் எங்க சண்முகம் அண்ணாச்சி நடித்து இருந்தார்.

ரஜினிகாந்த்–கமல்ஹாசன்

கேள்வி:– இந்திய சினிமா நூற்றாண்டின் பரிசாக ரஜினிகாந்தும், நீங்களும் இணைந்து நடிப்பீர்களா?

பதில்:– உங்களுக்கு பரிசு...எங்களுக்கு? இரண்டு பேரையும் வைத்து படம் எடுக்கிற அளவுக்கு வசதியான தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை.

கேள்வி:– கிருஷ்–3, விஸ்வரூபம்–2 மாதிரி சச்சின்–2, கமல்ஹாசன்–2 வர முடியுமா?

பதில்:– அடுத்த தலைமுறை நிச்சயமாக வரும். எங்களை விட திறமையானவர்கள் நிச்சயமாக வருவார்கள்.



தணிக்கை குழு

கேள்வி:– தணிக்கை குழுவில் தகுதியானவர்கள் இருக்கிறார்களா?

பதில்:– தணிக்கை குழுவில் சினிமாவை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் ஆட்கள் அங்கே இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். முழுமையாக சினிமாவை தெரிந்தவர்கள் இருந்தால், தணிக்கை குழு இன்னும் நன்றாக இருக்கும்.’’

இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

லட்சுமி


விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், செயலாளர் ரவி கொட்டாரக்கரா, பெப்சி தலைவர் அமீர், இந்து என்.ராம், ரவி, நடிகர் மோகன், நடிகைகள் லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், ரோகிணி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.



நடிகை அபிராமி, ரம்யா ஆகிய இருவரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top