கார்–மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி - டிரைவர் கைது
பரமக்குடி, டிச. 9:
பரமக்குடி அருகே உள்ள முத்துச்செல்லாபுரத்தை சேர்ந்தவர் மலைக்கள்ளன். இவரது மகன் மணிகண்டன் (வயது21). கல்லூரி மாணவர். இவர் தனது நண்பர் வினோத் (20)துடன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட சென்றார்.
இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றபோது எதிரே மதுரையில் இருந்து ஏ.டி.எம். மிஷின்களில் பணம் வைக்கும் ‘டிரக்’ கார் வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் மணிகண்டன், வினோத் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். வினோத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து டிரக் டிரைவரான சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கலை சேர்ந்த மணிகண்டன் (27) கைது செய்யப்பட்டார்.
0 comments