படிக்கட்டில் பயணித்தவரை கண்டித்தவர் மீது தாக்குதல் கண்டித்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
இராமேசுவரம்:
இராமேசுவரத்திலிருந்து நேற்று இரவு 7 மணியளவில் தனுஷ்கோடிக்கு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் புதுரோட்டை சேர்ந்த உமயசெல்வம் என்பவர் சென்றார். அப்போது வேர்க்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் அந்த பஸ்சில் ஏறினார். அவர் படிக்கட்டில் நின்றார். அவரை மேலே வருமாறு உமயசெல்வம் கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் உமயசெல்வத்தை அந்த வாலிபர் தாக்கிவிட்டு பாதி வழியில் இறங்கி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் தான் தாக்கப்பட்டது குறித்து புதுரோட்டில் உள்ள தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அந்த டவுன் பஸ் தனுஷ்கோடிக்கு சென்று விட்டு திரும்பியது. புதுரோட்டுக்கு அந்த பஸ் வந்தபோது அங்கு திரண்டு இருந்தவர்கள், பஸ்சை மறித்து டிரைவர் புவனேசுவரனிடம் வாலிபர் குறித்து விசாரித்தனர். அவர் எங்கு இறங்கினார் என்பது தனக்கு தெரியாது என டிரைவர் கூறினார்.
ஆனால் உனக்கு எப்படி தெரியாமல் இருக்கும் என்று கூறியபடியே அங்கிருந்தவர்கள் பஸ்சின் கண்ணாடி மீது கற்களை வீசினர். இதில் கண்ணாடிகள் உடைந்தன.
இது குறித்து டிரைவர் புவனேசுவரன் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சின் கண்ணாடியை உடைத்தவரையும், உமயசெல்வத்தை தாக்கியவரையும் தேடி வருகின்றனர்.
0 comments