கொச்சியில் முதல் ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி
கொச்சி:
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ரோகித் 72, கோஹ்லி 86 ரன் விளாசினர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா 2,0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி, கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று பகல்/இரவு ஆட்டமாக நடந்தது. டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கிறிஸ் கேல், சார்லஸ் களமிறங்கினர். முதல் ஓவரின் 2வது பந்திலேயே கேல் பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.
அவுட் ஆவதை தவிர்ப்பதற்காக டைவ் அடித்தபோது அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே தூக்கிச் சென்றனர். இதைத் தொடர்ந்து சார்லசுடன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தனர். சார்லஸ் 42 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் அவரிடமே பிடிபட்டார். சாமுவேல்ஸ் 24 ரன் எடுத்து ரெய்னா சுழலில் கிளீன் போல்டானார். டேரன் பிராவோ , சிம்மன்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தது. சிம்மன்ஸ் 29, தியோநரைன் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
பொறுப்புடன் விளையாடிய டேரன் பிராவோ அரை சதம் அடித்தார். அவர் 59 ரன் எடுத்து ஷமி வேகத்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். கேப்டன் வேய்ன் பிராவோ 24 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் 48.5 ஓவரில் 211 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஹோல்டர் 16 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய பந்துவீச்சில் ஜடேஜா, ரெய்னா தலா 3, அஷ்வின் 2, ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். தவான் 5 ரன் மட்டுமே எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சார்லஸ் வசம் பிடிபட்டார்.
அடுத்து ரோகித்துடன் கோஹ்லி இணைந்தார். அபாரமாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் 5000 ரன் கடந்து அசத்தினார். ரோகித் 72 ரன் எடுத்து (81 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோஹ்லி 86 ரன் எடுத்து (84 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) ஹோல்டர் பந்துவீச்சில் சுனில் நரைனிடம் பிடிபட்டார். ரெய்னா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
யுவராஜ், கேப்டன் டோனி பதற்றமின்றி விளையாடி வெற்றியை வசப்படுத்தினர். இந்தியா 35.2 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து அபாரமாக வென்றது. யுவராஜ் 16, டோனி 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1,0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டணத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.
0 comments