இராமேசுவரம் மீனவர்கள் 11 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்:
மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்
இராமேசுவரம், நவ. 18:
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும், இரு நாட்டு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேசுவரம் மீனவர்கள் கடந்த 6–ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ் ஆகியோர் கூறுகையில், மீனவர்கள் கடந்த 11 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் எங்களது போராட்டத்தை மதித்து மத்திய–மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டம் காரணமாக மீனவர்கள் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்தவே கஷ்டப்படும் நிலை உருவாகி உள்ளது.
எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இன்று (திங்கட்கிழமை) முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினர்.
இன்று காலை முதல் இராமேசுவரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் 600–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் மற்றும் அதனை சார்ந்த தொழில்களும் விறு விறுப்படைந்துள்ளது.
0 comments