இராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் காட்டூரணி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் நாகலிங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் மணிகண்டன் (வயது 33), திருமணம் ஆகாதவர்.
நேற்று இவர், மோட்டார் சைக்கிளில் தேவிபட்டிணம் சாலையில் சென்றார். அப்போது எதிரே கன்னியாகுமரி நோக்கி ஒரு லாரி சென்றது.
இந்த லாரி எதிர்பாராத விதமாக மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் வேகமாக சென்றது. இதுகுறித்து வயர்லெஸ் மூலம் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளில் போலீசார் விரட்டி சென்று லாரியை ஏர்வாடியில் மடக்கினர். ஏர்வாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புனிதன், ஏட்டுகள் மணிமுத்து, மாசிலாமணி, ஜடாமுனியன் ஆகியோர் லாரியை பறிமுதல் செய்ததோடு, அதன் டிரைவரையும் பிடித்தனர்.
விபத்து குறித்து கேணிக்கரை போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி லாரி டிரைவர் வேலுசாமி (49)யை கைது செய்தார். இவர், கன்னியாகுமரி மாவட்டம் பாப்புவிளையை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகன் ஆவார்.
0 comments