பரமக்குடி அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ‘மர்ம’ சாவு
பரமக்குடி, அக். 21:
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள விளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, விவசாயி. இவரது மனைவி கூத்தாயி. இவருக்கு சசிகலா (வயது20), ஜமுனா ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
சசிகலா அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரும் மாணவி சசிகலாவும் காதலித்து வந்தனர்.
இந்த விவரம் கருப்பை யாவுக்கு தெரியவந்தது. அவர் மகளை கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் சசிகலா காதலனை திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய விவரம் அறிந்த கருப்பையா நேற்று அங்கு சென்று மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
நேற்று இரவு வீட்டில் சசிகலா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இநந்தார்? என்ற விவரம் தெரியவில்லை.
இதனை தொடர்ந்து கருப்பையா மற்றும் உறவினர்கள் சசிகலாவின் உடலை அங்குள்ள சுடுகாட்டுக்கு தூக்கி சென்ற எரிக்க முயன்றதாக தெரிகிறது.
இதுபற்றிய தகவல் விளத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராமுக்கு தெரிய வந்தது. அவர் இது குறித்து எமனேஸ்வரம் போலீசுக்கு தெரிவித்தார்.
உடனே போலீசார் விரைந்து சென்று எரிக்க முயன்ற சசிகலாவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருப்பையா, அவரது மனைவி கூத்தாயி, மகள் ஜமுனா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்மமாக இறந்த சம்பவம் பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments