இராமநாதபுரத்தில் பஸ் மோதி கல்லூரி மாணவி சாவு
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே உள்ளது நல்லாங்குடி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் சகுந்தலா தேவி (வயது22).
இவர், இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் எம்.காம் படித்து வந்தார். கடந்த 17–ந்தேதி சகுந்தலாதேவி, கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.
கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர், சாலையை கடந்து கல்லூரிக்கு செல்ல முயன்றார். அப்போது அந்த வழியே மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி அரசு பஸ் வந்தது.
அந்த பஸ், எதிர் பாராதவிதமாக மாணவி சகுந்தலாதேவி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட சகுந்தலாதேவி, இரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments