தண்டையார்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கார் வாங்கி சொந்தமாக தொழில் செய்ய 5 லட்சம் கேட்டதற்கு வெறும் 200 ரூபாய் தந்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக கூறியுள்ளார்.
புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் திருவள்ளுவர் குடியிருப்பை சேர்ந்தவர் மதனகோபால் (68). கட்டிட கான்ட்ராக்டர். இவரது மகன் பாஸ்கர் (45). இவரது மனைவி ரேகா (40). இவர்களுக்கு ஸ்ரீநிதி (11) என்ற மகளும், அவினாஷ் சாய்ராம் (8) என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீநிதி 6ம் வகுப்பும், சாய்ராம் 3ம் வகுப்பும் படிக்கின்றனர். நேற்று முன்தினம் வீட்டில் ரேகா தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஆசாமி, ரேகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 15 சவரன் தாலி செயினை பறித்து சென் றார். இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கொலையாளியை பிடிக்க துணை கமிஷனர் நஜ்மல் ஹோடா தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ், எஸஐ இசக்கிபாண் டியன் மற்றும் போலீஸ்காரர்கள் சடகோபன், கிருஷ்ணமூர்த்தி, தீனன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. ரேகாவின் கணவர் பாஸ்கரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, பெருங்களத்தூரில் வசிக்கும் அவரது தங்கை சுமதியின் கணவர் சதீஷ்குமார் (25) கடந்த 7ம் தேதி வீட்டுக்கு வந்து சென்றதாக செல்போனில் ரேகா கூறியதாக தெரிவித்தார். சதீஷ்குமார் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து போலீ சார் சதீஷ்குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால், அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் பெருங்களத்தூரில் உள்ள சதீஷ்குமார் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவர் இல்லை. அவரது வீட்டை சோதனை செய்தபோது, வீட்டின் குளியலறையில் உள்ள ஒரு வாளியில் ரத்தக்கறை படித்த உடைகள் தண்ணீ ரில் ஊறவைத்து இருந்தது தெரிந்தது.
சுமதியிடம் கேட்டபோது அவர் வெளியே சென்றிருப்பதாக கூறினார். பின்னர் அதே பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கார் டிரைவராக வேலை பார்த்தேன். போதிய வருமானம் இல்லை. வேலையும் சரிவர இல்லாததால் குடும்ப கஷ்டம் அதிகமானது. வீட்டு வாடகை கூட தரமுடியவில்லை. ஏற்கனவே ரேகா எனக்கு ரூ.5 ஆயிரம் கடன் தந்துள்ளார். எனவே கடந்த 7ம் தேதி ரேகாவிடம் மீண்டும் பணம் கேட்க சென்றேன்.
அப்போது, அவரது மகள் ஸ்ரீநிதி உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தாள். இதனால் பணம் கேட்காமல் ஒருவரை பார்க்க வந்தேன். அப்படியே உங்களை பார்க்க வந்தேன் எனக்கூறி, அங்கேயே சாப்பிட்டுவிட்டு புறப்பட்டேன். மீண்டும் மறுநாள் பாஸ்கர் வீட்டுக்கு வந்தேன். அப்போது வீட்டில் யாரும் இல்லை. ரேகா மட்டும் இருந்தார். என்னை வீட்டுக்குள் அழைத்து காபி கொடுத்தார்.
அப்போது அவரிடம், நான் சொந்தமாக கார் வாங்கி தொழில் செய்ய போகிறேன். அதற்காக எனக்கு ரூ.5 லட்சம் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ரேகா ஏற்கனவே வாங்கிய பணத்தை இதுவரை தரவில்லை. மீண்டும் ரூ.5 லட்சம் கேட்டால் எப்படி தரமுடியும் என கூறி, இதை வைத்து கொள்ளுங்கள் என்று 200 ரூபாயை கொடுத்தார்.
இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. 5 லட்சம் கேட்டால், 200 ரூபாய் தருகிறாயா என கேட்டு தகராறு செய்தேன். இதில் வாக்குவாதம் முற்றியதில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து ரேகா மீது தூவினேன். பின்னர் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து ரேகாவின் கழுத்தை அறுத்து கீழே தள்ளினேன். ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும், அவரது 15 சவரன் தாலி செயினை கழற்றி எடுத்து கொண்டேன். பின்னர் வீட்டிலும் மாடி படிக்கட்டிலும் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பினேன்.
பெருங்களத்தூர் வந்ததும் மனைவி சுமதிக்கு தெரியாமல் ரத்தக்கறை படிந்த உடைகளை கழற்றி ஒரு வாளியில் சோப்பு போட்டு ஊற வைத்தேன். இதை பார்த்த சுமதி என்ன ஆனது என கேட்டாள். அதற்கு ஒரு சாவுக்கு சென்றேன். அதனால் துணிகளை நனைத்து விட்டேன் என்றேன். பின்னர், தாம்பரத்தில் உள்ள ஒரு அடகுகடையில் ரூ.30 ஆயிரத்துக்கு நகையை அடகு வைத்தேன்.
அதில் ரூ.15 ஆயிரத்தை நெட் வங்கியில் போட்டேன். மீதம் உள்ள பணத்தில் ரூ.7ஆயிரம் வீட்டு வாடகையை கொடுத்துவிட்டு, மது அருந்தினேன். போலீசார் பிடித்து விடுவார்கள் என பயந்து வேறுஒரு வீட்டில் பதுங்கி இருந்தேன். அங்கும் வந்து போலீசார் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். கொலை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.
கத்தி வாங்கினார்
ரேகா பணம் தராவிட்டால் நகையை பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சதீஷ்குமார், புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் கூர்மையான சிறிய கத்தியும், மற்றொரு கடையில் ரூ.50க்கு மிளகாய் பொடியும் வாங்கியுள்ளார். போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்தது.
0 comments