அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கத்தை எதிர்த்து வழக்கு
தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
புதுடெல்லி, செப். 25:-
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை முடிவடையும் தருவாயில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை கர்நாடக அரசு நீக்கியது. மேலும் இவ்வழக்கினை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவும் இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக அரசின் முடிவினை எதிர்த்து ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுக்களில், அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டதால் விசாரணை தடைபடும் என்றும், நீதிபதியை மாற்றுவதால் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஆகும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, கோர்ட் உத்தரவின்படி பவானி சிங் நியமனம் தொடர்பான ஆவணங்களை கர்நாடக ஐகோர்ட் பதிவாளர் தாக்கல் செய்தார். அதில், பவானி சிங்கை நியமிக்கும்போதே கர்நாடக அரசு எதிர்க்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியது ஐகோர்ட்.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிபதியின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
ஆனால், பவானி சிங் நீக்கம் தொடர்பாக கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்றும் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு தரக்கூடாது என்றும் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இன்றுடன் விசாரணை முடிவடைந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
0 comments