குரூப்-2 எழுத்து தேர்வு டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது
சென்னை, செப்.5:-
துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1064 காலி பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு நடக்கிறது. இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது.
தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர், சார் பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, சிறை துறை நன்னடத்தை அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எழுதுவதற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிலையில், 2013-2014-ம் ஆண்டுக்கான காலி பணியிடங்களில், 1064 இடங்களை நிரப்புவதற்காக குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், 66 துணை வணிகவரி அதிகாரி பதவிகள், 302 கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர் பதவிகள், 147 கைத்தறித்துறை ஆய்வாளர் பதவிகள், 14 சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி பதவிகள், 71 உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் பதவிகள், 370 வருவாய் உதவியாளர் பதவிகள், 2 சார் பதிவாளர் பதவிகள் உள்ளிட்டவை அடங்கும்.
இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 8-ந் தேதி ஆகும்.
மேற்கண்ட தகவலை டி.என். பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
0 comments